அந்தியூர் அருகே நள்ளிரவில் ஊருக்குள் நுழைந்த ஒற்றை யானை
- ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் யானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
- யானை அப்பகுதியில் வந்த போது அங்கிருந்து நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வெளியே வந்து பார்த்துள்ளனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் யானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளில் யானைகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோடைகாலம் தொடங்கி விட்டால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமப்புறங்களில் உணவுக்காக யானைகள் அவ்வப்போது வெளியேறுவது வாடிக்கை.
இந்த நிலையில் நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் அந்தியூர் வனசரகத்திற்கு உட்பட்ட வட்டக்காடு என்ற கிராமத்தில ஒற்றை ஆண் யானை ஒன்று சர்வ சாதாரணமாக சாலையில் நடந்து சென்றது.
இந்த காட்சி அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியுள்ளது. யானை அப்பகுதியில் வந்த போது அங்கிருந்து நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வெளியே வந்து பார்த்துள்ளனர்.
அப்போது ஒற்றை யானையைக் கண்ட பயத்தில் பொதுமக்கள் வீட்டுக்குள் புகுந்து கதவை சாத்திக் கொண்டனர். இந்த நிலையில் இரவு நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.