சத்தியமங்கலத்தில் மின்கசிவால் மளிகை கடையில் பயங்கர தீ விபத்து
- மின்கசிவு காரணமாக மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
- தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் முதலில் கடையின் ஷட்டரை திறந்து தீயைஅணைக்கும் முயற்சியில் இறங்கினர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம்-மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில் முகமது பாரூக் என்பவர் மளிகை கடைவைத்து நடத்தி வருகிறார். இந்த கடையை நேற்று இரவு 10 மணியளவில் வியாபாரம் முடிந்ததும் வழக்கம் போல் பூட்டி சென்றனர். இந்த நிலையில் நள்ளிரவு 1.30 மணியளவில் மின்கசிவு காரணமாக மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தீ பரவி மளமளவென எரிய தொடங்கியது.
இதன் காரணமாக மளிகை கடையில் இருந்து அதிகளவில் புகை வெளியேறியது. அப்போது எதிரில் உள்ள பெட்ரோல் பேங்க் ஊழியர்கள் இதைபார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இவர்கள் சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கும், கடையின் உரிமையாளருக்கும் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் முதலில் கடையின் ஷட்டரை திறந்து தீயைஅணைக்கும் முயற்சியில் இறங்கினர். அப்போது கடையில் இருந்த அரிசி, மளிகை பொருட்கள், எண்ணை உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து கொண்டு இருந்தது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதன் காரணமாக சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் எரிந்து சேதமானது.