உள்ளூர் செய்திகள்

சத்தியமங்கலம் அருகே மயங்கி கிடந்த பெண் யானை உயிரிழப்பு

Published On 2024-03-05 10:00 GMT   |   Update On 2024-03-05 10:00 GMT
  • தாய் யானையால் எழுந்து நிற்க முடியவில்லை.
  • பெண் யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானை கூட்டங்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறி வனப்பகுதியில் உள்ள சாலையில் சர்வ சாதாரணமாக நடமாடி வருகிறது.

இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சத்தியமங்கலம் வனச்சரகம், பண்ணாரி கோவில் அருகே குட்டியுடன் தாய் யானை ஒன்று வந்துள்ளது. அப்போது அந்த தாய் யானை திடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தது.

இதைப் பார்த்த குட்டி யானை தாய் யானையை சுற்றி சுற்றி வந்து சத்தமாக பிளறியது. யானை சத்தம் கேட்டு அருகில் உள்ள மக்கள் ஓடி வந்து பார்த்தனர். பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான குழுவினர் தாய் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

40 வயது மதிக்கத்தக்க தாய் யானைக்கு குளுக்கோஸ் மற்றும் குடிப்பதற்கு தண்ணீர், உண்பதற்கு இலைகள் போன்றவற்றை வனத்துறையினர் அளித்தனர். இருந்தாலும் தாய் யானையால் எழுந்து நிற்க முடியவில்லை.

தொடர்ந்து வனத்துறையினர் தாய் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் உயிரிழந்தது.

இரண்டு நாட்களாக தொடர் சிகிச்சை அளித்த நிலையில் பெண் யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News