உள்ளூர் செய்திகள்

நடத்தையின் சந்தேகத்தில் தினமும் போதையில் தகராறு: தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை- மனைவி ஆத்திரம்

Published On 2023-05-16 06:08 GMT   |   Update On 2023-05-16 06:08 GMT
  • மனைவியின் நடத்தையில் ரமேஷ் சந்தேகம் அடைந்தார். இதனால் தினந்தோறும் மணிமேகலையை அடித்து உதைத்தும் வந்துள்ளார்.
  • இரவு முழுவதும் கணவரின் உடலுடன் வீட்டிலிருந்த மணிமேகலை, இன்று காலை சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

சேலம்:

சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டி ரெயில்வே லைன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரமேஷ் மூட்டை தூக்கும் தொழில் செய்து வந்தார்.

இந்த நிலையில் ரமேசுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது. தினமும் குடித்து விட்டு வந்து, மனைவியிடம் ரமேஷ் சண்டை போட்டதாக தெரிகிறது. மேலும் மனைவியின் நடத்தையில் ரமேஷ் சந்தேகம் அடைந்தார். இதனால் தினந்தோறும் மணிமேகலையை அடித்து உதைத்தும் வந்துள்ளார்.

நேற்று இரவு வழக்கம் போல ரமேஷ் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது மணிமேகலையுடன் அவர் தகராறு செய்தார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் உண்டானது. அப்போது ரமேஷ், மணிமேகலையை தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிமேகலை, வீட்டில் இருந்த குளவி கல்லை எடுத்து ரமேசின் தலையில் போட்டார்.

இதில் கை, தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்ட ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இரவு முழுவதும் கணவரின் உடலுடன் வீட்டிலிருந்த மணிமேகலை, இன்று காலை சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற சூரமங்கலம் போலீசார், ரமேஷின் உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News