பேரணிக்கு அனுமதி மறுப்பு: உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி.க்கு ஆர்.எஸ்.எஸ்.நோட்டீஸ்
- கோர்ட்டு அனுமதித்தும் நீலகிரி மாவட்டத்தில் பேரணி நடத்த அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
- 4 பேர் மீதும் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இன்று மற்றும் 29-ந்தேதிகளில் 33 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நடத்துவதற்கு அனுமதித்தது. இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளது.
கோர்ட்டு அனுமதித்தும் நீலகிரி மாவட்டத்தில் பேரணி நடத்த அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் உள்துறை செயலாளர் அமுதா, போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், எருமாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. அந்த நோட்டீசில் பேரணிக்கு அனுமதி வழங்காததை ஐகோர்ட்டின் உத்தரவை மீறும் செயல் என்றும், உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். இல்லையென்றால் 4 பேர் மீதும் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.