உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் அருகே கத்தி முனையில் டாஸ்மாக் கடையில் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கொள்ளை

Published On 2022-09-05 04:34 GMT   |   Update On 2022-09-05 04:34 GMT
  • கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் கடை ஊழியர்களுக்கு கடும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது.
  • கொள்ளை குறித்து பாடலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.

பாடலூர்:

பெரம்பலூர் அருகே பாடலூர் பகுதியில் ஒரு அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்றைய தினம் விடுமுறை நாள் என்பதால் கடையில் விற்பனை களை கட்டியது.

பின்னர் இரவு 9.50 மணி அளவில் சூப்பர்வைசரான பெரம்பலூர் கனரம்பட்டி வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் (வயது 50), விற்பனையாளரான துரைமங்கலம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த ராம்குமார்( 44), உதவி விற்பனையாளரான ஜெகன் ஆகிய மூன்று பேரும் விற்பனையான பணத்தை எண்ணிக் கொண்டிருந்தனர்.

அப்போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கும்பல் கடை முன்பு திபுதிபுவென வந்து இறங்கினர்.

அதில் இரண்டு பேர் மோட்டார் சைக்கிளை இயக்கிய படி நின்று கொண்டிருந்தனர். நான்கு பேர் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கடைக்குள் புகுந்தனர். பின்னர் கடை விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் உள்ளிட்ட ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி ரூ. 4 லட்சத்து ஐம்பதாயிரம் ரொக்க பணத்தை அள்ளிக்கொண்டு வெளியேறினர்.

பின்னர் கடை முன்பு தயார் நிலையில் நின்ற மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பிச் சென்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் கடை ஊழியர்களுக்கு கடும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது. இது பற்றி பாடலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags:    

Similar News