உள்ளூர் செய்திகள்

பெருந்துறை பகுதியில் சூறாவளி காற்றில் 15 வீடுகளின் மேற்கூரை பறந்தது- 3 ஆயிரம் வாழைகளும் சேதம்

Published On 2023-06-04 04:45 GMT   |   Update On 2023-06-04 04:45 GMT
  • ஈரோடு மாநகர் பகுதியில் 9 மணி அளவில் காற்றின் வேகம் அதிக அளவில் இருந்தது.
  • பெருந்துறை பகுதியில் நேற்று பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் வெயில் நிறைவடைந்ததும் வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

கடந்த ஒரு வாரமாக ஈரோடு மாவட்டத்தில் 100 டிகிரி வெயில் பதிவாகி வந்தது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. அனல் காற்றுடன், புழுக்கமும் நிலவியதால் வாகன ஓட்டிகள், வீட்டில் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி கிடந்தனர். முக்கியச் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. ஈரோடு மாநகர் பகுதியில் 9 மணி அளவில் காற்றின் வேகம் அதிக அளவில் இருந்தது.

அப்போது இடி மின்னல் பயங்கரமாக இருந்தது. பின்னர் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. பலத்த காற்றால் விளம்பர பேனர்கள் பறந்து சென்றன. இதேப்போல் மாவட்டத்தில் அதிகபட்சமாக பெருந்துறையில் 45 மி.மீ மழை பெய்தது. பவானி, சென்னிமலை, அம்மாபேட்டை போன்ற பகுதிகளிலும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

ஈரோட்டில் இருந்து பவானி லட்சுமி நகர் வரை காற்று கடுமையாக வீசியதால் அந்த சமயம் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்குவதில் கடும் அவதி அடைந்தனர். சென்னி மலையில் இரவு 10 மணி முதல் தொடர்ந்து ஒரு மணி நேரம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

பெருந்துறை பகுதியில் நேற்று பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் பெருந்துறை அடுத்த வாய்க்கால் மேடு பகுதியைச் சேர்ந்த குழந்தைசாமி, கந்தசாமி ஆகியோருக்கு சொந்தமான ரூ.10 லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதமடைந்தது. இதே போல் அதே பகுதியில் சின்னப்பன் என்பவர் 20-க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டு உள்ளார். நேற்று வீசிய சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 15 வீடுகளின் மேல் இருந்த ஆஸ்பெட்டாஸ் ஷீட்டுகள் பறந்து சென்றன. மேற்கூரைகள் அனைத்தும் தூக்கி வீசப்பட்டு காட்சி அளிக்கிறது. இதேப்போல் பவானி, அம்மாபேட்டை, அந்தியூர் பகுதிகளிலும் இரவு ஒரு மணி நேரம் இடி , மின்னலுடன் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. சூறாவளி காற்றுடன் மண்ணும் வாரி இறைத்து வந்ததால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். எனினும் இந்த எதிர்பாராத மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

பெருந்துறை - 45, பவானி - 31.60, அம்மாபேட்டை - 30, சென்னிமலை - 25.60, ஈரோடு-2.

Tags:    

Similar News