உள்ளூர் செய்திகள்

ராதாபுரம் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து பல லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கொள்ளை

Published On 2023-05-07 05:15 GMT   |   Update On 2023-05-07 05:15 GMT
  • டாஸ்மாக் காவலாளி அய்யாக்குட்டி பணியில் இருந்தபோது அங்கு ஒரு மினி லோடு ஆட்டோவில் 4 பேர் கும்பல் வந்தனர்.
  • மேற்பார்வையாளர் ராமர் ராதாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

பணகுடி:

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடக்கன்குளத்தில் இருந்து பெத்தரெங்கபுரம் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இதன் மேற்பார்வையாளராக களக்காட்டை சேர்ந்த ராமர் என்பவர் பணியாற்றி வருகிறார்.

வழக்கம்போல் நேற்று இரவு விற்பனையை முடித்துவிட்டு ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை கைப்பையில் எடுத்துக்கொண்டு கடையை பூட்டிவிட்டு அவர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் டாஸ்மாக் காவலாளி அய்யாக்குட்டி பணியில் இருந்தபோது அங்கு ஒரு மினி லோடு ஆட்டோவில் 4 பேர் கும்பல் வந்தனர்.

அவர்கள் காவலாளியை மிரட்டி அமரச்செய்துவிட்டு, கடையின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்தனர். பின்னர் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் மற்றும் விலை உயர்ந்த மது பாட்டில்களை அந்த கும்பல் லோடு ஆட்டோவில் ஏற்றி சென்று விட்டனர். மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிராக்களையும் அந்த கும்பல் உடைத்தனர்.

இதுகுறித்து மேற்பார்வையாளர் ராமர் ராதாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக இன்று காலை போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News