போலீஸ்காரரின் தந்தை கழுத்தை அறுத்து படுகொலை- 2 பேர் கைது
- மணிமாலமுருகன் மற்றும் அவரது உறவினர் உத்தப்பனை வழி மறித்து தகராறு செய்தார்.
- பின்னர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் உத்தப்பனை கழுத்தை அறுத்தார்.
சின்னாளப்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை அடுத்த ஜாதிக்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் உத்தப்பன் (வயது 55). விவசாயியான இவருக்கு சுப்பம்மாள் என்ற மனைவியும், நாகபாலன் என்ற மகன் மற்றும் முருகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். மகன் நாகபாலன் கரூரில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். உத்தப்பனுக்கு ஜாதிகவுண்டன்பட்டி அருகே உள்ள கொல்லபட்டியில் விவசாய நிலம் உள்ளது. உத்தப்பனின் மனைவி சுப்பம்மாளின் உறவினரான கொல்லபட்டியை சேர்ந்த மணிமாலமுருகன் என்பவருக்கும் உத்தப்பனுக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. நிலம் சம்பந்தமாக இரு குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வருவதால் உத்தப்பன் தனது நிலத்தில் விவசாயம் செய்யாமல் தரிசாக போட்டு விட்டு விவசாய கூலி வேலைக்கு சென்று வந்தார்.
நேற்று மாலை தோட்டத்தில் கூலி வேலை பார்த்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மணிமாலமுருகன் மற்றும் அவரது உறவினர் உத்தப்பனை வழி மறித்து தகராறு செய்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் உத்தப்பனை கழுத்தை அறுத்தார். இதில் அவர் கழுத்து அறுப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த அம்பாத்துரை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், துணை சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் நேரில் வந்து விசாரணை செய்தனர். பின்னர் கொலையில் ஈடுபட்ட மணிமாலமுருகன் மற்றும் தினேஷ் (25) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.