உள்ளூர் செய்திகள்

பொதட்டூர்பேட்டையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்

Published On 2023-03-26 16:40 IST   |   Update On 2023-03-26 16:40:00 IST
  • கோண சமுத்திரம் அருகே விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவனின் வலது கால், வலது தோள்பட்டை ஆகியவற்றில் முறிவு ஏற்பட்டது.
  • பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதட்டூர்பேட்டை:

பள்ளிப்பட்டு தாலுகா, பொதட்டூர்பேட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் இளங்கோவன் (வயது 40). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு அத்திமாஞ்சேரி பேட்டை பகுதியில் ரோந்து சென்றார். அதன் பிறகு பாத்தகுப்பம், கொத்த குப்பம் ஆகிய பகுதிகளின் வழியாக அவர் மோட்டார் சைக்கிளில் பொதட்டூர்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு நள்ளிரவில் திரும்பி வந்து கொண்டிருந்தார். வழியில் கோண சமுத்திரம் கிராமம் அருகே உள்ள சாலை வளைவில் மோட்டார் சைக்கிள் திரும்பும்போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது.

இதில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவனின் வலது கால், வலது தோள்பட்டை ஆகியவற்றில் முறிவு ஏற்பட்டது. மேலும் அவரது விலா எலும்பிலும் முறிவு ஏற்பட்டு அவர் படுகாயம் அடைந்தார். தகவல் கிடைத்ததும் பொதட்டூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை உடனடியாக சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவரை சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News