உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் அருகே மாடியில் இருந்து குதித்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை முயற்சி

Published On 2022-07-19 12:46 IST   |   Update On 2022-07-19 12:46:00 IST
  • காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
  • ஆர்பாக்கம் கிராமத்தை சேர்ந்த இஷாந்த் என்ற மாணவர் பிளஸ்-1 படித்து வருகிறார்.

காஞ்சிபுரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த வாரம் பிளஸ்-2 மாணவி மர்மமாக இறந்தார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பள்ளி முன்பு நடந்த போராட்டம் கலவரமாக மாறியது.

பள்ளி வாகனங்கள் முழுவதும் தீ வைத்து எரிக்கப்பட்டது. பள்ளியும் சூறையாடப்பட்டது. இந்த கலவரத்தில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர்.

இது தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து உள்ளனர். கலவரத்துக்கு காரணமானவர்களை மேலும் தேடி வருகிறார்கள்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் காஞ்சீபுரம் அருகே தனியார் பள்ளியில் பிளஸ்-1 மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆர்பாக்கம் கிராமத்தை சேர்ந்த இஷாந்த் என்ற மாணவர் பிளஸ்-1 படித்து வருகிறார்.

அவர் சரியாக படிக்காததை ஆசிரியர்கள் கண்டித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் அங்குள்ள 2-வது மாடியில் இருந்து மாணவர் திடீரென கீழே குதித்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு மாணவனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவி தற்கொலையால் பள்ளி சூறையாடப்பட்டு பெரும் கலவரமாக மாறியது. அதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பள்ளி முன்பு இன்று காலை ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. மாணவன் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி இன்று வழக்கம்போல் செயல்பட்டது.

Tags:    

Similar News