உள்ளூர் செய்திகள்

பெரியபாளையம் கோவிலில் குழந்தையிடம் நகை திருடிய பெண் கைது

Published On 2022-08-24 18:49 IST   |   Update On 2022-08-24 18:49:00 IST
  • சென்னை விம்கோ நகர் காந்தி நகரை சேர்ந்தவர் பிரதீப்.
  • கோவிலில் உள்ள சக்தி மண்டபம் அருகே வந்தபோது அவரது குழந்தையின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்கச்சங்கிலியை காணாமல் திடுக்கிட்டார்.

பெரியபாளையம்:

சென்னை விம்கோ நகர் காந்தி நகரை சேர்ந்தவர் பிரதீப் (வயது 36). இவர் தனது குடும்பத்தினருடன் பெரியபாளையம் கோவிலுக்கு நேர்த்தி கடன் செலுத்த சென்றார்.

இந்த கோவிலில் உள்ள சக்தி மண்டபம் அருகே வந்தபோது அவரது குழந்தையின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்கச்சங்கிலியை காணாமல் திடுக்கிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காணாமல் போன தங்கச்சங்கிலி குறித்து பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் உடனடியாக கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த பகுதியில் இருந்த திருவண்ணாமலை மாவட்டம், குப்பம் பகுதியை சேர்ந்த கீதா (39) என்ற பெண்ணை சந்தேகத்தின் பேரில் பிடித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர். அப்போது அந்த பெண், குழந்தையிடம் இருந்த நகையை திருடியதை ஒப்புக்கொண்டார்.

மேலும் அந்த பெண் அளித்த தகவலின் பேரில் போலீசார் தங்கச்சங்கிலியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். அந்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு் முன்னிலையில் ஆஜர் செய்தனர். பின்னர், அவரது உத்தரவின் பேரில் போலீசார் கீதாவை புழல் சிறையில் அடைத்தனர்.

Similar News