கொசுத்தொல்லை தாங்க முடியல... அரசு சொசுகு பஸ்சில் மருந்து அடித்த பயணி
- கோவையில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை தாக்குப்பிடித்த பயணிகள் இதன் பிறகு ஒன்றும் செய்ய முடியாது என நினைத்தனர்.
- ஒட்டன்சத்திரம் வந்ததும் பயணிகள் அனைவரும் கீழே இறங்கினர்.
ஒட்டன்சத்திரம்:
கோவையில் இருந்து மதுரை நோக்கி அரசு சொகுசு பஸ் ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த பஸ்சில் சுமார் 45 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில் ஏ.சி. பெட்டிகள் பழுதடைந்து அதில் இருந்து தண்ணீர் வழிந்தபடியும், இருக்கைக்கு அடியில் கொசுக்கள் கடித்தபடியும் இருந்தது.
சொகுசு பஸ் என்று கட்டணம் வசூலித்து பயணிகளை கொசுக்கடிக்க வைத்த நிலை குறித்து கண்டக்டரிடம் கேட்டபோது பல நாட்களாகவே இதேபோல்தான் உள்ளது. இதுகுறித்து டெப்போவில் கூறி உள்ளோம். விரைவில் சரி செய்வார்கள் என்றார். இருந்தபோதும் கோவையில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை தாக்குப்பிடித்த பயணிகள் இதன் பிறகு ஒன்றும் செய்ய முடியாது என நினைத்தனர்.
ஒட்டன்சத்திரம் வந்ததும் பயணிகள் அனைவரும் கீழே இறங்கினர். ஒருவர் தனது சொந்த செலவில் அங்குள்ள கடையில் கொசு மருந்து வாங்கி ஒவ்வொரு இருக்கைக்கும் கீழே அடித்து கொசுவை கட்டுப்படுத்தினார். அதன்பிறகு 10 நிமிடம் கழித்து சொசுகு பஸ் புறப்பட்டு சென்றது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பட்டப்பகலில் பயணித்த அரசு பஸ்சில் கொசுத்தொல்லை ஏற்பட்ட காரணம் பழுதடைந்த மின்சாதனப்பெட்டி மற்றும் அதில் இருந்து வெளியேறிய தண்ணீர் வழிந்துகொண்டே இருந்ததால் கொசுக்கள் அதிக அளவு காணப்பட்டது. இதனை பல நாட்களாக போக்குவரத்துக்கழக நிர்வாகம் சரிசெய்யாததால் இனி வரும் காலங்களிலாவது விரைந்து சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.