பள்ளிப்பட்டில் பாலம் மீது வாகனம் மோதி விபத்து- அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பலி
- பள்ளிப்பட்டு தாலுகா அத்திமாஞ்சேரிபேட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் பாலகுமார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிப்பட்டு:
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அத்திமாஞ்சேரிபேட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் பாலகுமார் (வயது 38). இவர் வெளியகரம் கிராம அரசு ஆஸ்பத்திரியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் மாலையில் வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது, கர்லம்பாக்கம் கிராமம் அருகே வந்த நிலையில், நிலைத்தடுமாறிய அவரது வாகனம் பாலத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மார்பு மற்றும் முதுகில் பலத்த காயமடைந்த பாலகுமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, அத்திமாஞ்சேரிபேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து முதலுதவி அளித்தனர்.
மேலும், மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக உயரிழந்தார். இது குறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.