உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி புதுமாப்பிள்ளை ஆணவக்கொலை: மாமனாரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை

Published On 2023-03-31 06:36 GMT   |   Update On 2023-03-31 06:36 GMT
  • மோட்டார்சைக்கிளில் சென்ற ஜெகனை, மாமனார் சங்கர் உள்பட சிலர் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.
  • விசாரணைக்கு பிறகே கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற விவரங்கள் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி கிட்டம்பட்டியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 25). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவர் முழுக்கான்கொட்டாயை சேர்ந்த சரண்யா (21) என்பவரை காதலித்து கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதல் திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி கிருஷ்ணகிரி அணை சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்ற ஜெகனை, மாமனார் சங்கர் உள்பட சிலர் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.

அந்த கொலை தொடர்பாக சங்கர், கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் அன்றே சரண் அடைந்தார். இந்த கொலை தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் முத்தம்பட்டியை சேர்ந்த நாகராஜ் (21), ஜிஞ்சுப்பள்ளியை சேர்ந்த முரளி (20) ஆகிய 2 பேர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

இதையடுத்து போலீசார் ஜெகன் மாமனார் சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்காக கிருஷ்ணகிரி கோர்ட்டில் போலீசார் நேற்று மனு தாக்கல் செய்துள்ள நிலையில் காவலில் எடுத்து 3 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி அளித்துள்ளது.

இந்த விசாரணைக்கு பிறகே இக்கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற விவரங்கள் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News