உள்ளூர் செய்திகள்

தச்சநல்லூரில் மாயமான தொழிலாளி அடித்துக்கொலை

Published On 2022-07-01 08:27 GMT   |   Update On 2022-07-01 08:27 GMT
  • நெல்லை தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி (வயது60).
  • மாயாண்டியின் உறவினர்கள் தச்சநல்லூரில் உள்ள மதுரை-நெல்லை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நெல்லை:

நெல்லை தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி (வயது60). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு இறைச்சி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 27-ந் தேதி கடைக்கு செல்வதாக கூறி சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இது தொடர்பாக அவரது உறவினர்கள் தச்சநல்லூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது மாயாண்டி வழக்கமாக ஒரு வாலிபருடன் தினமும் மதுக்குடிப்பது வருவது தெரியவந்தது. அந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் வழக்கம் போல சம்பவத்தன்றும் நாங்கள் இருவரும் மதுகுடித்துவிட்டு சென்றுவிட்டோம் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மாயாண்டியின் உறவினர்கள் இன்று காலை தச்சநல்லூரில் உள்ள மதுரை-நெல்லை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு கடும்போக்குவரத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வாகனங்கள் தச்சநல்லூர் வேப்பங்குளம் வழியாக திருப்பி விடப்பட்டன.

சம்பவ இடத்திற்கு தச்சநல்லூர் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மாயாண்டி மாயமான வழக்கில் போலீசார் அலட்சியமாக செயல்படுவதாகவும், தீவிர விசாரணை நடத்தி உடனடியாக அவரை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து நெல்லை கிழக்கு மண்டல துணை கமிஷனர் சீனிவாசன், மாநகர தலைமையிடத்து துணை கமிஷனர் அனிதா ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் மாயாண்டியை தேடும் பணியில் தீவிரம் காட்டினர். அப்போது தாழையூத்து ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் ஒருவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு பாதி அழுகிய நிலையில் ஒருவர் இறந்து கிடந்தார்.

அவரது உடலில் அடிபட்ட காயங்களும் இருந்தன. அவர் மாயாண்டியாக இருக்கலாம் என சந்தேகித்த போலீசார் அவரது உறவினர்களை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றனர். அவர்கள் அங்கு இறந்து கிடந்தது மாயாண்டி என்பதை உறுதி செய்தனர்.

அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு இங்கு வீசப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனினும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகே சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News