உள்ளூர் செய்திகள்

ராசிபுரம் அருகே கறி விருந்துக்கு சென்று திரும்பிய 2 வாலிபர்கள் விபத்தில் பலி

Published On 2023-07-31 04:19 GMT   |   Update On 2023-07-31 04:19 GMT
  • முனியப்பன் கோவில் அருகே இருந்த வளைவில் சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
  • விபத்து குறித்து ராசிபுரம் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மேட்டுக்காடு அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (24), கூலி தொழிலாளி. இவரது உறவினர் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (21). இவர்கள் 2 பேரும் நேற்று முத்துக்காளிப்பட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு கறி விருந்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

பின்னர் கறி விருந்தை முடித்துக் கொண்டு அவர்கள் 2 பேரும் மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். இரவு 9.30 மணியளவில் அவர்கள் ராசிபுரம்-ஆண்டகளூர் கேட் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் அருகே இருந்த வளைவில் சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் அவர்களது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.

இதில் 2 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திலேயே சுரேஷ் பலியானார். பிரபாகரன் காயத்துடன் உயிருக்கு போராடினார். இதுபற்றி தெரியவந்ததும் ராசிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் பலியானார்.

இதையடுத்து விபத்தில் பலியான சுரேஷ், பிரபாகரன் ஆகியோர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ராசிபுரம் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News