உள்ளூர் செய்திகள்

நாங்குநேரியில் விபத்து- மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பலி

Published On 2023-08-26 07:28 GMT   |   Update On 2023-08-26 07:28 GMT
  • 2 பேரின் உடலும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
  • விபத்து தொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சேதுராயர்புரம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி(வயது 34). இவரது உறவினர் களக்காடு அருகே சிதம்பரபுரத்தை சேர்ந்த ரகுவரன்(26).

கட்டிட தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் இன்று அதிகாலை நாங்குநேரியில் இருந்து நெல்லைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை ரகுவரன் ஓட்டிச் சென்றுள்ளார். மந்திரமூர்த்தி பின்னர் அமர்ந்திருந்தார்.

நாங்குநேரியை கடந்து நான்குவழிச்சாலையில் உள்ள தனியார் மில் அருகே வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மந்திரமூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார். ரகுவரன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதுதொடர்பாக அந்த வழியாக சென்றவர்கள் நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரகுவரன் மற்றும் பலியான மந்திர மூர்த்தி ஆகியோரை ஆம்புலன்சு மூலமாக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்லும் வழியில் ரகுவரன் பரிதாபமாக இறந்தார்.

தொடர்ந்து 2 பேரின் உடலும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News