உள்ளூர் செய்திகள்

அமைச்சர் நாசர் மகன் ஆசிம்ராஜா பதவி பறிப்பு- தி.மு.க. தலைமை நடவடிக்கை

Published On 2023-02-08 11:19 GMT   |   Update On 2023-02-08 11:19 GMT
  • திருவள்ளூர் மத்திய மாவட்டம் ஆவடி மாநகர செயலாளர் எஸ்.என். ஆசிம்ராஜாவை மாநகர பொறுப்பில் இருந்து விடுவிப்பு.
  • திருமுல்லைவாயல் காந்திபுரத்தை சேர்ந்த சன்பிரகாஷ் ஆவடி மாநகர கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை:

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் மகன் ஆசிம்ராஜா. திருவள்ளூர் மத்திய மாவட்ட ஆவடி மாநகர செயலாளராக பதவி வகித்து வந்தார். தற்போது அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மத்திய மாவட்டம் ஆவடி மாநகர செயலாளர் எஸ்.என். ஆசிம்ராஜாவை மாநகர பொறுப்பில் இருந்து விடுவித்து, கழகப் பணிகள் செவ்வனே நடைபெற அவருக்கு பதிலாக திருமுல்லைவாயல் காந்திபுரத்தை சேர்ந்த சன்பிரகாஷ் ஆவடி மாநகர கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகர கழக அமைப்பின் பிற நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

ஆவடி மாநகராட்சி தொடர்பான பல்வேறு திட்ட பணிகளில் ஆசிம் ராஜா தலையிடுவதாக கட்சி தலைமைக்கு வந்த புகார்களின் அடிப்படையில் அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

Similar News