பள்ளி மாறியதால் மனமுடைந்து மாணவி ஆற்றில் குதித்து தற்கொலை- விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
- இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.
- சிறுமுகை மூலத்துறை பவானி ஆற்றங்கரையில் உள்ள புதரில் ரோஷினி பிணமாக மீட்கப்பட்டார்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் தாசம்பாளையத்தை சேர்ந்தவர் அப்துல் காதர்(வயது42). மருந்துக்கடை உரிமையாளர்.
இவரது மனைவி ஷர்மிலி(36). இவர்களது மகள் ரோஷினி(13). இவர் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 5-ந் தேதி டியூசன் சென்ற ரோஷினி வீடு திரும்பவில்லை. இதையடுத்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.
இதற்கிடையே மறுநாள் மாணவியின் காலணி மற்றும் சைக்கிள் ஆகியே ரெயில்வே கேட் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் கிடந்தது. போலீசார் அங்கு சென்று அதனை மீட்டனர்.
மேலும் மாணவி பவானி ஆற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தீயணைப்பு துறை உதவியுடன் ஆற்றில் இறங்கி தேடினர். நேற்று 2-வது நாளாக பவானி ஆற்றில் தேடும் பணி நடந்தது.
இந்த நிலையில் சிறுமுகை மூலத்துறை பவானி ஆற்றங்கரையில் உள்ள புதரில் ரோஷினி பிணமாக மீட்கப்பட்டார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
அங்கு அவரது உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, மாணவி கடந்த ஆண்டு வரை மெட்ரிக் பள்ளியில் படித்து வந்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு அவரை மெட்ரிக் பள்ளியில் இருந்து மாற்றி சி.பி.எஸ்.இ பள்ளியில் சேர்த்து விட்டனர். பள்ளி மாறியதால், அவர் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இதன் காரணமாகவே அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.