உள்ளூர் செய்திகள்

சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்களுக்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க மேட் விரிப்பு

Published On 2024-03-15 10:11 GMT   |   Update On 2024-03-15 10:11 GMT
  • கோவில் உட்பரிகாரத்திலும் நடைபாதை கற்கள் சூடாகி பக்தர்களின் பாதங்களை பதம் பார்த்தது.
  • கோவில் நிர்வாகம் வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்த கோவில் உட்பிரகாரம் பகுதியில் காயர் மேட் போட்டுள்ளனர்.

சென்னிமலை:

சென்னிமலை முருகன் கோவிலில் தினமும் 6 கால பூஜைகள் நடக்கிறது. மேலும் தொடர்ந்து பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா வந்து கொண்டுள்ளது. உள்ளூர், வெளியூர் பக்தர்கள் பள்ளி விடுமுறை தினம் ஆதலால் குழந்தைகளுடன் வந்து பூஜைகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு வெகு தூரம் நடக்க வேண்டும். இந்த இடத்தில் தார் ரோடு வெட்ட வெளியாக உள்ளதால் தற்போது கோடை வெயில் தாக்கத்தில் சூடாகி நடக்க மிகவும் சிரமப்பட்டனர்.

மேலும் கோவில் உட்பரிகாரத்திலும் நடைபாதை கற்கள் சூடாகி பக்தர்களின் பாதங்களை பதம் பார்த்தது. குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டனர். இதையறிந்த கோவில் நிர்வாகம் வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்த கோவில் உட்பிரகாரம் பகுதியில் காயர் மேட் போட்டுள்ளனர்.

வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இருந்து தார் ரோடு செல்லும் பகுதிகளிலும் மேட் விரித்துள்ளனர். இது வெயிலுக்கு இதமாக இருப்பதாகவும், அதிக சூடு கால் பாதங்களில் தாக்குவது இல்லை எனவும் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tags:    

Similar News