உள்ளூர் செய்திகள்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மண்டபம் மீனவர்கள் 9 பேர் விடுதலை

Published On 2023-08-08 05:43 GMT   |   Update On 2023-08-08 05:43 GMT
  • மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி ராமேசுவரம், மண்டபம் மீனவர் சங்கத்தினர் மத்திய-மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
  • விடுதலையான 9 பேரும் இன்னும் ஓரிரு நாட்களில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த மாதம் 25-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டி அடித்ததோடு, எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி பாம்பன், மண்டபத்தை சேர்ந்த ஆறுமுகம், மணிகண்டன், குமார், வேலு, ஜெயசீலன், முத்து, இருளாண்டி உள்பட 9 மீனவர்களை கைது செய்து படகையும் சிறை பிடித்து சென்றனர்.

இலங்கையில் உள்ள ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் நீதிபதி உத்தரவுப்படி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி ராமேசுவரம், மண்டபம் மீனவர் சங்கத்தினர் மத்திய-மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மண்டப மீனவர்கள் 9 பேரும் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மீண்டும் இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் 9 மீனவர்களையும் விடுதலை செய்வதாக உத்தரவிட்டார். இதையடுத்து விடுதலையான 9 பேரும் இன்னும் ஓரிரு நாட்களில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News