உள்ளூர் செய்திகள்

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த வாலிபருக்கு மதுவில் விஷம் கலந்து கொன்ற 2 பேர் கைது

Published On 2023-02-13 08:10 GMT   |   Update On 2023-02-13 08:10 GMT
  • சுரேசின் நண்பரான மணிமாறனை தனது வலையில் விழவைத்த கருப்புச்சாமி மதுபாட்டிலில் ஊசிமூலம் விஷம் ஏற்றியுள்ளார்.
  • விஷம் ஏற்றிய மதுபாட்டில் ஒன்றையும், விஷம் இல்லாத மதுபாட்டில் ஒன்றையும் மணிமாறனிடம் கொடுத்துள்ளார்.

பழனி:

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள பூலாம்பட்டியை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி மகேஸ்வரி (44). கணவர் இறந்துவிட்ட நிலையில் மகேஸ்வரி வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த உறவினரான சுரேஷ் (39) என்பவருடன் மகேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.

இவர்கள் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் மகேஸ்வரியின் தம்பி கருப்புச்சாமி (36) என்பவர் தனது சகோதரியிடம் கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறியுள்ளார். சுரேஷையும் தனியாக அழைத்து இனிமேல் தனது அக்காவை பார்க்க வரவேண்டாம் என கண்டித்துள்ளார். இருந்தபோதும் அவர்கள் கள்ளத்தொடர்பு நீடித்து வந்தது.

இதனையடுத்து சுரேஷை கொலை செய்ய கருப்புச்சாமி முடிவு செய்தார். மது பழக்கம் கொண்ட சுரேசுக்கு விஷம் கலந்து கொடுத்து கொலைசெய்ய முடிவு செய்தார். ஆனால் தான் அழைத்தால் சுரேஷ் வரமாட்டார் என நினைத்து அவரது நண்பரான மணிமாறன் (25) என்பவரை உதவிக்கு அழைத்தார்.

சுரேசுக்கு விஷம் கலந்த மதுவை கொடுக்குமாறு மணிமாறனிடம் கருப்புச்சாமி கூறினார். அதன்படி கடந்த 3ம் தேதி மதுகுடித்து பின்னர் வாந்தி எடுத்த சுரேஷ் பழனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மதுவில் விஷம் கலந்திருந்தது குறித்து டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த மகேஸ்வரி தனது காதலன் இறப்பில் மர்மம் இருப்பதாக கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

சுரேசின் நண்பரான மணிமாறனை தனது வலையில் விழவைத்த கருப்புச்சாமி மதுபாட்டிலில் ஊசிமூலம் விஷம் ஏற்றியுள்ளார். விஷம் ஏற்றிய மதுபாட்டில் ஒன்றையும், விஷம் இல்லாத மதுபாட்டில் ஒன்றையும் மணிமாறனிடம் கொடுத்துள்ளார். விஷம் கலந்த மதுபாட்டிலை சுரேசுக்கு கொடுத்துவிட்டு விஷம் இல்லாத மதுவை தான் குடித்துள்ளார். சற்று நேரத்தில் அவர் வாந்தி எடுத்து மயக்கமடையவே அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதனையடுத்து போலீசார் விசாரணையில் அவர்கள் கொலை செய்தது உறுதியானது.

இதனை தொடர்ந்து கருப்புச்சாமி மற்றும் அவரது நண்பர் மணிமாறனை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News