உள்ளூர் செய்திகள்

மதுரை கள்ளழகர் திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

Published On 2024-04-19 05:15 GMT   |   Update On 2024-04-19 05:15 GMT
  • கடந்த ஆண்டு பெய்த பருவமழை காரணமாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது.
  • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது.

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு முறைப்பாசன அடிப்படையில் கால்வாய் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 6ந் தேதி நிறுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு பெய்த பருவமழை காரணமாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. அதனைத் தொடர்ந்து அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து 60 அடிக்கு கீழ் குறைந்தது. மழை நின்று விட்டதால் அணைக்கு நீர்வரத்தும் முற்றிலும் நின்றது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 59.19 அடியாக உள்ளது. நீர் இருப்பு 3454 மி.கன அடியாக உள்ளது.

மதுரையில் நடைபெறும் உலகப்புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நீர்பாசனத்துறை அதிகாரிகள் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டனர். நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 1000 கன அடி வீதம் வருகிற 22ந் தேதி வரை 4 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.30 அடியாக உள்ளது. அணைக்கு 209 கன அடி நீரு வருகிறது. 105 கன அடி வெளியேற்றப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 104.69 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறில் மட்டும் 4.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News