உள்ளூர் செய்திகள்

அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை, பணம் கொள்ளை

Published On 2024-04-03 05:49 GMT   |   Update On 2024-04-03 05:49 GMT
  • 3 வீடுகளில் நடந்த கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • திண்டுக்கல்லில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ரெயில் நிலையம் செல்லும் சாலையில் அதிகமான வங்கிகள் மற்றும் தனியார் பள்ளி, அரசு பள்ளிகள் உள்ளன. மேலும் வடமதுரை போலீஸ் நிலையம், யூனியன் அலுவலகம் ஆகியவையும் உள்ளது. இங்கு எப்போதும் பொதுமக்கள் வந்துசெல்வதால் பரபரப்பாக காணப்படும்.

இந்நிலையில் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள அடுத்தடுத்த 3 வீடுகளில் நகை, பணம், மோட்டார் சைக்கிள் ஆகியவை திருடுபோனது. 2 வீட்டில் கொள்ளைபோன பொருட்களின் மதிப்பு தெரிய வில்லை. இப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது50) என்பவரின் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர் 10 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். மேலும் அருகில் இருந்த வீட்டில் மோட்டார் சைக்கிளையும் எடுத்து சென்றனர். மற்றொரு வீட்டில் கொள்ளையடிக்க முயன்றபோது வீட்டில் இருந்தவர்கள் எழுந்துவிடவே கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இச்சம்பவம் குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திண்டுக்கல் டி.எஸ்.பி. துர்காதேவி உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திண்டுக்கல்லில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.

போலீஸ் நிலையம் அருகிலேயே அடுத்தடுத்து 3 வீடுகளில் நடந்த கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News