உள்ளூர் செய்திகள்

சபரிமலை சீசன் தொடங்கியதால் பழனியில் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு

Published On 2024-11-24 14:24 IST   |   Update On 2024-11-24 14:24:00 IST
  • பல்வேறு கோவில்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்கின்றனர்.
  • மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பழனி:

தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் என வருடத்தின் பெரும்பாலான மாதங்கள் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தற்போது சபரிமலை சீசன் தொடங்கிய நிலையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர்.

தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே மாலை அணிந்து விரதம் கடைபிடித்து வரும் பக்தர்கள் சபரிமலைக்கு வர தொடங்கியதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்கள் பழனி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்பட பல்வேறு கோவில்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்கின்றனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பழனியில் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி, ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில் நிலையம், யானைப்பாதை, படிப்பாதை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

மேலும் மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இனிவரும் காலங்களிலும் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Tags:    

Similar News