கூடுவாஞ்சேரி அருகே கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய மூதாட்டி கத்தியால் குத்திக் கொலை
- கூடுவாஞ்சேரி அடுத்த காரணை புதுச்சேரி பெரியார் நகர் 13வது தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி.
- கோவிலுக்கு சென்ற மூதாட்டி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காரணை புதுச்சேரி பெரியார் நகர் 13வது தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி வயது (70). இவர் நேற்று முன்தினம் இரவு பக்கத்து தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலுக்கு சென்று திரும்பும் போது அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம் வயது (52) என்பவர் லட்சுமியை வீட்டில் விடுவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். அதன்பிறகு லட்சுமியை காணவில்லை என அவரது கணவர் வேடசாமி கூடுவாஞ்சேரி போலிஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து காணாமல் போன லட்சுமியை கூடுவாஞ்சேரி போலீசார் தேடி வந்த நிலையில், சிங்கப்பெருமாள் கோயில் அடுத்த ஆப்பூர் அருகே உள்ள அரசு காப்புக்காட்டில் லட்சுமி கழுத்தில் கத்தியால் குத்தியும், தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதாக பாலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மூதாட்டி லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பாலூர் போலீசார் தலைமறைவாக உள்ள ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகத்தை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். கோவிலுக்கு சென்ற மூதாட்டி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.