உள்ளூர் செய்திகள்

கடன் பிரச்சனையில் நிதி நிறுவன அதிபரை காரில் கடத்திய சென்னை பெண் உள்பட 4 பேர் கைது

Published On 2023-11-23 13:21 IST   |   Update On 2023-11-23 13:21:00 IST
  • வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குரூஸ் அலெக்சாண்டரை 5 பேர் கும்பல் தாக்கி பணம் மற்றும் 2 கார்களோடு அவரை கடத்தி சென்றனர்.
  • காயத்ரி மற்றும் கடத்தலுக்கு உதவியாக இருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:

பாளை கிருஷ்ணாபுரம் செல்வலட்சுமி நகரை சேர்ந்தவர் குரூஸ் அலெக்சாண்டர் (வயது 44). நிதி நிறுவன அதிபர்.

இவரது மனைவி சென்னையில் உள்ள தாய் வீட்டில் குழந்தையுடன் வசித்து வருவதால், குரூஸ் அலெக்சாண்டர் வீட்டில் தனியாக இருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் அதிகாலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குரூஸ் அலெக்சாண்டரை 5 பேர் கும்பல் தாக்கி பணம் மற்றும் 2 கார்களோடு அவரை கடத்தி சென்றனர்.

பின்னர் அந்த கும்பல் அவரை தாக்கி ஒரு வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கிக்கொண்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூா் அருகே இறக்கி விட்டு கார்களை எடுத்துச்சென்றனர். இதுகுறித்து சிவந்திபட்டி போலீசில் அலெக்சாண்டர் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் குரூஸ் அலெக்சாண்டர் கடந்த 2020-ம் ஆண்டு சென்னை அண்ணாநகரை சேர்ந்த காயத்ரி (55) என்பவரிடம் தொழில் ரீதியாக சுமார் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கி, பின்னர் அந்த பணத்தை திருப்பி கொடுக்கவில்லை எனவும், இதனால் காயத்ரி தலைமையில் 5 பேர் கொண்ட கும்பல் குரூஸ் அலெக்சாண்டரை தாக்கி காரில் கடத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து காயத்ரி மற்றும் கடத்தலுக்கு உதவியாக இருந்த கேரளாவை சேர்ந்த உமர், அப்துல், ஜியாவுதீன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கடத்தல் சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதும், அவர்கள் கேரளாவில் பதுங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்களையும் கைது செய்ய தனிப்பட்டையினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News