உள்ளூர் செய்திகள்

தோட்டத்தில் புகுந்து வாழை-பாக்கு மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

Published On 2024-03-04 06:15 GMT   |   Update On 2024-03-04 06:15 GMT
  • காட்டு யானைகள் சுமார் 300-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை முறித்து சேதம் விளைவித்துள்ளது.
  • யானை கூட்டம் விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் உள்ளனர்.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வரட்சி நிலவுவதால் வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி கிராமத்துக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது.

அதிலும் சமீப காலமாக யானைக் கூட்டங்கள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் ஜீரகள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சோமசுந்தரம் (வயது 40) என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்துக்குள் நேற்று இரவில் புகுந்த 3 காட்டு யானைகள் சுமார் 300-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள், 50-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை முறித்து சேதம் விளைவித்துள்ளது.

இதனால் விவசாயிக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து யானை கூட்டம் விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதால் அப்பகுதி விவசாயிகள் கடும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் உள்ளனர்.

சேதமடைந்த வாழை மரங்களுக்கும், பாக்கு மரங்களுக்கும் வனத்துறையினர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், யானைகள் விவசாய நிலங்களில் நுழைவதை தடுக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News