உள்ளூர் செய்திகள்
யானை தாக்கி இறந்து கிடந்த மல்லப்பா.

தாளவாடி அருகே யானை தாக்கி விவசாயி பலி

Published On 2022-07-06 05:53 GMT   |   Update On 2022-07-06 05:53 GMT
  • யானையின் சத்தம் கேட்டு காவலுக்கு இருந்த விவசாயி மல்லப்பா தோட்டத்திற்கு சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த ஒற்றை யானை மல்லப்பாவை துதிக்கையால் தூக்கி வீசி காலில் மிதித்தது.
  • இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து விவசாயி மல்லப்பா பலியானார்.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்தவர் மல்லப்பா (70) விவசாயி.

இவரது மனைவி சிவம்மா. இவர்களுக்கு சித்துமல்லு என்ற மகனும், ரேகா என்ற மகளும் உள்ளனர். மல்லப்பாவுக்கு தர்மாபுரம் என்ற பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது. இதில் வாழை சாகுபடி செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 2 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை வாழை தோட்டத்தில் புகுந்து நாசம் செய்து கொண்டிருந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசம் ஆனது.

யானையின் சத்தம் கேட்டு காவலுக்கு இருந்த விவசாயி மல்லப்பா தோட்டத்திற்கு சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த ஒற்றை யானை மல்லப்பாவை துதிக்கையால் தூக்கி வீசி காலில் மிதித்தது.

இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து விவசாயி மல்லப்பா பலியானார். இன்று காலை மல்லப்பா வீடு திரும்பாததால் குடும்பத்தினர் வந்து பார்த்த போது அவர் யானை தாக்கி இறந்து கிடந்தது தெரிய வந்தது.

இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். யானை மிதித்து விவசாயி பலியான சம்பவம் மலைகிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News