உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் போதை மாத்திரை வைத்திருந்த வாலிபர் கைது

Published On 2023-07-25 04:43 GMT   |   Update On 2023-07-25 04:43 GMT
  • போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு போதை ஊசி, போதை மாத்திரை பயன்படுத்தும் கும்பலை கைது செய்து வருகின்றனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீநாத்தை கைது செய்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக போதை மாத்திரை பயன்படுத்துவது, போதை ஊசி போடுவது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.

அதன் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு போதை ஊசி, போதை மாத்திரை பயன்படுத்தும் கும்பலை கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சூரம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சாஸ்திரி நகரில் வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். அவர் பிடித்து விசாரித்த போது அவர் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீநாத் (19) என்பதும், சென்ட்ரிங் வேலைக்கு சென்று வந்ததும் தெரிவந்தது.

அவரை சோதனை செய்தபோது 100 போதை மாத்திரை வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் ஹரிஷ் என்ற நபரிடம் போதை மாத்திரை வாங்கியதாக கூறினார்.

அதைத்தொடர்ந்து ஹரிசை போலீசார் பிடிக்க சென்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார். ஹரிஷ் மீது ஏற்கனவே சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீநாத்தை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் ஹரிசை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர் பிடிப்பட்டால் தான் போதை மாத்திரை விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News