உள்ளூர் செய்திகள்

எல்லைப் பகுதியில் மட்டும் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு

Published On 2024-04-21 04:28 GMT   |   Update On 2024-04-21 04:28 GMT
  • வீடியோ கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்பு குழு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கலைக்க உத்தரவிட்டது.
  • ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, கோபி, பவானி சட்டசபை தொகுதிகளில் குழுக்கள் கலைக்கப்பட்டன.

ஈரோடு:

பாராளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகளின்படி ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படைகள் வீதம் 8 சட்டசபை தொகுதிக்கும், 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. இது தவிர ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கூடுதலாக ஒரு பறக்கும் படை குழு இயங்கியது.

இது தவிர வீடியோ கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்பு குழு, பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு தனியாக குழு என 144 குழுக்கள் செயல்பட்டன. ஓட்டு பதிவு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்ததால் நேற்று காலை முதல் பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்பு குழு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கலைக்க உத்தரவிட்டது.

அதன்படி ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, கோபி, பவானி சட்டசபை தொகுதிகளில் குழுக்கள் கலைக்கப்பட்டன. அதேசமயம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட தாளவாடி, அந்தியூர் தொகுதிக்குட்பட்ட பர்கூர் ஆகியவை கர்நாடகா மாநிலத்தை ஒட்டி உள்ளது.

கர்நாடகாவில் இன்னும் தேர்தல் முடியாததால் மாநில எல்லையை கண்காணிக்கும் வகையில் அந்தியூர் தொகுதியில் 3 பறக்கும் படை, பவானிசாகர் தொகுதியில் 3 பறக்கும் படையினர் மற்றும் எல்லைப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News