உள்ளூர் செய்திகள்

செம்மஞ்சேரியில் கல்லூரி உணவகத்தில் கோழிக்கறி சாப்பிட்ட என்ஜினீயரிங் மாணவர் திடீர் மரணம்

Published On 2022-07-22 14:26 IST   |   Update On 2022-07-22 14:26:00 IST
  • கல்லூரிக்குச் சென்ற மாணவர் வழக்கம்போல் மதியம் கல்லூரியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டார்.
  • அப்போது அவர் கோழிக்கறி வாங்கி சாப்பிட்டதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் தீராஜ் ரெட்டிக்கு வாந்தி ஏற்பட்டது.

திருவான்மியூர்:

ஆந்திர மாநிலம், கடப்பா பகுதியைச் சேர்ந்தவர் தீராஜ் ரெட்டி(வயது20). செம்மஞ்சேரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.சி.இ 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நண்பர்களுடன் சோழிங்கநல்லூர், எம்.ஜி.ஆர். சாலையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் கல்லூரிக்குச் சென்ற அவர் வழக்கம்போல் மதியம் கல்லூரியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டார். அப்போது அவர் கோழிக்கறி வாங்கி சாப்பிட்டதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் தீராஜ் ரெட்டிக்கு வாந்தி ஏற்பட்டது.

உடனடியாக அவரை நண்பர்கள் சோழிங்கநல்லூரில் உள்ள தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றனர். ஆனாலும் அவருக்கு தொடர்ந்து வாந்தியும், உடல் நிலையில் சோர்வும் ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் தீராஜ் ரெட்டியை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேறொரு ஆஸ்பத்திரியில் சேர்க்க முடிவு செய்து காத்திருந்தனர்.

இந்த நிலையில் தீராஜ் ரெட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் செம்மஞ்சேரி போலீசார் தீராஜ் ரெட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே கல்லூரி உணவகத்தில் வழங்கப்பட்ட கோழிக்கறி குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோழிக்கறி சாப்பிட்ட என்ஜினீயரிங் மாணவர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News