ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன
- தேர்தல் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக நகராட்சி ஆணையர் சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான ஈவெரா திருமகன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில் இன்று தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்.
தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 31ம் தேதி முதல் தொடங்கும் என்றும், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 7ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 8ம் தேதியும், வேட்புமனு திரும்ப பெறும் நாள் பிப்ரவரி 10 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக நகராட்சி ஆணையர் சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மாவட்டத்தில் அமலுக்கு வந்துள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.