உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவிலில் இன்று மாலை அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

Published On 2023-10-18 04:52 GMT   |   Update On 2023-10-18 04:52 GMT
  • சங்கரன்கோவில்-வீரசிகாமணி சாலையில் 18-ம் படி கருப்பசாமி கோவில் அருகே திறந்தவெளி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
  • எடப்பாடி பழனிசாமியை வரவேற்க நிர்வாகிகளும், தொண்டர்களும் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

சங்கரன்கோவில்:

அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழாவை தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பிரமாண்டமாக கொண்டாட வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதன்படி மாவட்டந்தோறும் அ.தி.மு.க. தொடக்க விழா, கட்சி நிர்வாகிகளால் பொதுக்கூட்டங்கள் நடத்தியும், நலத்திட்டங்கள் வழங்கியும், கட்சி கொடியேற்றியும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. ஆண்டு விழா பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்கிறது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று எழுச்சியுரை ஆற்றுகிறார்.

இதற்காக சங்கரன்கோவில்-வீரசிகாமணி சாலையில் 18-ம் படி கருப்பசாமி கோவில் அருகே திறந்தவெளி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.

இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

விழாவையொட்டி எடப்பாடி பழனிசாமியை வரவேற்க நிர்வாகிகளும், தொண்டர்களும் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளனர். பொதுக்கூட்ட மேடை பகுதியில் வாழைத்தோரணங்கள், நகரின் பல இடங்களில் வரவேற்பு அலங்காரங்கள் என சங்கரன்கோவில் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. சங்கரன்கோவில் நகர் பகுதியில் ஏராளமான வரவேற்பு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமிக்கு சுமார் ஆயிரம் பெண்கள் திரண்டு பூரண கும்ப மரியாதை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக நெல்லை வழியாக சங்கரன்கோவிலுக்கு காரில் வரும் எடப்பாடி பழனிசாமிக்கு தென்காசி மாவட்ட எல்லையான தேவர்குளத்தில் அ.தி.மு.க.வினர் பிரமாண்ட வரவேற்பு அளிக்கின்றனர். தொடர்ந்து அவருக்கு சங்கரன்கோவில் நகரில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. எடப்பாடி பழனிசாமி வருகையால் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News