உள்ளூர் செய்திகள்

கள்ளக்காதலி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த தொழிலாளி - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

Published On 2023-09-15 12:39 IST   |   Update On 2023-09-15 12:39:00 IST
  • கடந்த 3 நாட்களுக்கு முன்பு தொழிலாளி அவரது கள்ளகாதலியின் வீட்டிற்கு சென்ற தங்கினார்.
  • மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை:

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள புதுக்காட்டை சேர்ந்தவர் 45 வயது பெண். இவர் கடந்த 15 ஆண்டுகளாக அவரது கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த 50 வயது கூலித் தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. குழந்தைகள் வீட்டில் இல்லாத நேரத்தில் 2 பேரும் ஜாலியாக இருந்து வந்தனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு தொழிலாளி அவரது கள்ளகாதலியின் வீட்டிற்கு சென்ற தங்கினார். சம்பவத்தன்று 2 பேரும் ஒன்றாக சேர்ந்து மது குடித்தனர். போதை தலைக்கேறிய நிலையில் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தொழிலாளி அவரது மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை பாட்டிலில் பிடித்து கள்ளக்காதலி மீது ஊற்றினார். பின்னர் அவர் மீது தீப்பற்ற வைத்து விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

கண்இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பெண்ணை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது தலைமறைவாக உள்ள தொழிலாளியை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News