உள்ளூர் செய்திகள்

போலீஸ் நிலையத்தில் புகுந்து தாக்குதல்- தி.மு.க.வினர் 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

Published On 2023-03-27 10:20 GMT   |   Update On 2023-03-27 10:20 GMT
  • ஜாமீன் மனுக்களை விசாரித்த திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி பாபு, ஐவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
  • நிபந்தனைகள் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகவில்லை.

திருச்சி:

திருச்சி கண்டோன்மென்ட் ஸ்டேட் பேங்க் காலனியில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு திரும்பியபோது தி.மு.க. அமைச்சர் கே.என்.நேருவுக்கு, கடந்த, 15-ந்தேதி திருச்சி சிவா எம்.பி. ஆதரவாளர்கள் கருப்புக் கொடி காட்டினர்.

இதையடுத்து, அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர்கள் சிவாவின் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். மேலும், சிவாவின் ஆதரவாளர்கள் அழைத்துச் செல்லப்பட்ட திருச்சி செஷன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்திற்குள் புகுந்து, திருச்சி எம்.பி. சிவா ஆதரவாளர்களை தாக்கினர்.

அதன்பேரில் தி.மு.க. நிர்வாகிகள் காஜாமலை விஜய், முத்துச்செல்வம், துரைராஜ், ராமதாஸ், திருப்பதி ஆகியோர் மீது, 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அனைவரையும் கைது செய்தனர். திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 2-ல் ஆஜர்படுத்தப்பட்ட அனைவரையும் வரும், 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி, 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஐவரின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஓம்பிரகாஷ், ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்தார். ஜாமீன் மனுக்களை விசாரித்த, 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெயக்குமார், ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை இன்று (27-ந்தேதி, திங்கட்கிழமைக்கு) ஒத்தி வைத்தார்.

இன்று ஜாமீன் மனுக்களை விசாரித்த திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி பாபு, ஐவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். நிபந்தனைகள் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகவில்லை.

அதையடுத்து, அவர்கள் நாளை திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட உள்ளளனர். கடந்த, 20-ந்தேதி மற்றும் 23-ந்தேதி என இரண்டு முறை தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்களை, திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண்-2 நீதிபதி பாலாஜி ஏற்கனவே தள்ளுபடி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News