உள்ளூர் செய்திகள்

செய்யூர் அருகே 10 பவுன் நகைக்காக வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அடித்துக் கொலை

Published On 2022-07-19 12:47 IST   |   Update On 2022-07-19 12:47:00 IST
  • கடப்பாக்கத்தை அடுத்த விளம்பூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்.
  • தேவகி அதிகாலை நேரத்தில் தினமும் மாடுகளுக்கு தீவனம் வைப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார்.

மதுராந்தகம்:

செய்யூர் அருகே உள்ள கடப்பாக்கத்தை அடுத்த விளம்பூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி தேவகி (வயது 68).கணவன்-மனைவி இருவரும் தனியாக வசித்து வருகிறார்கள். அவர்களது 2 மகன், 2 மகள்கள் அனைவரும் திருமணம் ஆகி தனித்தனியாக சென்னையில் வசித்து வருகிறார்கள்.

நேற்று அதிகாலை தேவகி வீட்டின் பின்புறத்தில் உள்ள மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை.

நீண்ட நேரத்துக்கு பின்னர் மனைவி திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த கணவர் சுப்பிரமணி வீட்டின் பின்புறம் சென்று பார்த்தார்.

அப்போது அங்குள்ள சாக்கு மூட்டையில் தேவகி கொலை செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தன. தலையில் பலத்த காயங்கள் இருந்தன.

மேலும் அவர் அணிந்து இருந்த 10 பவுன் நகை மாயமாகி இருந்தது. வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு மர்மகும்பல் தேவகியை கொலை செய்து 10 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

மேலும் உடலை சாக்குப்பையில் கட்டி வைத்து சென்று உள்ளனர்.

இது குறித்து சூனாம்பேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேவகி அதிகாலை நேரத்தில் தினமும் மாடுகளுக்கு தீவனம் வைப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார். இதனை நோட்டமிட்டு மர்ம கும்பல் அவரை கொன்று நகையை பறித்து சென்று உள்ளனர். எனவே அவர்களது வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். வயதான தம்பதி தனியாக இருப்பதை நோட்டமிட்டு இந்த கொடூர கொலையில் ஈடுபட்டு உள்ளனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News