திண்டுக்கல் லாட்ஜில் சென்னை உதவி பேராசிரியர் தூக்கிட்டு தற்கொலை
- அறை கதவு நீண்ட நேரம் திறக்காததால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் மேத்யூ. இவரது மகன் ஜேக்கப் (வயது 30). இவர் சென்னை சுவேதா என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீபாவளி விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானல் செல்வதாக தனது வீட்டில் கூறி விட்டு சென்றார். திண்டுக்கல் வந்த ஜேக்கப் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.
இன்று அவரது அறை கதவு நீண்ட நேரம் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் இது குறித்து நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மின் விசிறியில் தூக்கு போட்ட நிலையில் ஜேக்கப் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.