உள்ளூர் செய்திகள்

தாய், மகனை கொன்று கார் டிரைவர் தற்கொலை- மனைவியை இஷ்டப்படி வாழ விடுங்கள் என்ற உருக்கமான கடிதத்தால் பரபரப்பு

Published On 2022-12-09 08:56 GMT   |   Update On 2022-12-09 08:56 GMT
  • தாய் வசந்தா, மனைவி, மகன் ஆகியோர் அகிலா நகரில் உள்ள ஒரு மாடி வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர்.
  • கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கார்த்திகேயன் துபாயில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார்.

திருச்சி:

திருச்சி திருவானைக்காவல் நடுகொண்டையம் பேட்டை அகிலா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 34), கார் டிரைவர். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வசந்த பிரியா என்ற பட்டதாரி பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இவர் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் கார் கம்பெனியில் பி.ஆர்.ஓ.வாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியருக்கு சாமிநாதன் (8) என்ற மகன் இருந்தார்.

இந்தநிலையில் இங்கு வருமானம் போதவில்லை என்பதால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகேயன் துபாய் நாட்டுக்கு வேலைக்கு சென்றார். அங்கு ஒரு நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்தார். அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து சென்றார்.

அவரது தாய் வசந்தா, மனைவி, மகன் ஆகியோர் அகிலா நகரில் உள்ள ஒரு மாடி வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர். இதற்கிடையே கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கார்த்திகேயன் துபாயில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார்.

நேற்று காலை அவரது மனைவி வசந்த பிரியா வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். இதற்கிடையே மாலையில் வீட்டை உள் பக்கமாக பூட்டிவிட்டு தாய் வசந்தா, மகன் சாமிநாதன் ஆகியோரை கொன்று விட்டு கார்த்திகேயனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் நிவேதா லட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று இறந்தவர்கள் உடலை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வீட்டு அறையில் போலீசார் சோதனை நடத்திய போது கடிதம் ஒன்று சிக்கியது. அதில், எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. தாய், மகன் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக அவர்களை தன்னுடன் அழைத்து செல்வதாக கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தற்போது கடிதத்தின் முழு விவரம் வெளியாகி உள்ளது. அதில் மனைவி நன்றாக படித்து இருக்கிறாள். நல்ல வேலை பார்க்கிறாள். மனைவியை அவளது இஷ்டத்துக்கு வாழ விடுங்கள். எனக்கு மன உளைச்சல் அதிகமாக இருக்கிறது. எனவே சாக முடிவு செய்துவிட்டேன். தாயும், மகனும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக அவர்களையும் தன்னுடன் அழைத்து செல்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

கடிதத்தின் சாராம்சத்தை பார்க்கும்போது கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கார்த்திகேயன் தாயையும், மகனையும் கொன்று விட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி திருவானைக்காவல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News