உள்ளூர் செய்திகள்

கடையம் அருகே மரத்தில் கார் மோதி வாலிபர் பலி

Published On 2022-10-27 05:00 GMT   |   Update On 2022-10-27 05:00 GMT
  • கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாட்டில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 பேரையும் மீட்டனர்.
  • உயிரிழந்த அசோக்குமார் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடையம்:

சென்னையை சேர்ந்தவர் அசோக்குமார்(வயது 28). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

தீபாவளி விடுமுறையையொட்டி இவர் காரில் தனது நண்பர்களான சென்னையை சேர்ந்த பாஸ்கர் என்பவரது மகன் அசோக்குமார், ஆசிக் ஆகியோருடன் காரில் நெல்லைக்கு வந்தார்.

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் சுற்றுலா சென்ற அவர்கள் 3 பேரும் இன்று அதிகாலை அங்கிருந்து கடையம் வழியாக குற்றாலத்திற்கு செல்ல முடிவு செய்து புறப்பட்டனர். காரை அசோக்குமார் ஓட்டினார். அதிகாலை 4 மணி அளவில் கடையத்தை அடுத்த முதலியார்பட்டி அருகே கார் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்து புளியமரத்தில் மோதியது.

இந்த பயங்கர விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அந்த இடிபாட்டில் காரை ஓட்டி வந்த அசோக்குமார் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் இருந்த அவரது நண்பர்களான மற்றொரு அசோக்குமார், ஆசிக் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாட்டில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 பேரையும் மீட்டனர். மேலும் உயிரிழந்த அசோக்குமார் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மற்றொரு அசோக்குமார் மற்றும் ஆசிக் ஆகியோர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News