உள்ளூர் செய்திகள்

அந்தியூர் அ.தி.மு.க. பிரமுகரின் மனைவி விபத்தில் பலி

Published On 2023-09-16 04:59 GMT   |   Update On 2023-09-16 04:59 GMT
  • காரில் அந்தியூரில் இருந்து புதுக்கோட்டை, பிள்ளையார்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடும்பத்துடன் சென்றனர்.
  • விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அ.தி.மு.க. ஒன்றிய துணைச்செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி.சண்முகானந்தம். இவர் இவரது மனைவி புஷ்பவல்லி (வயது 47), இவர்களது மகன் மோகன் மற்றும் உறவினர் சரஸ்வதி ஆகியோர் குடும்பத்தினருடன் நேற்று காரில் அந்தியூரில் இருந்து புதுக்கோட்டை, பிள்ளையார்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடும்பத்துடன் சென்றனர்.

காரை திருக்குமரன் என்பவர் ஓட்டி சென்றார். பின்னர் அங்கிருந்து காரில் அந்தியூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது கரூர் அருகே அரவக்குறிச்சி என்ற இடத்தில் கார் வந்துகொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதில் எஸ்.ஜி.சண்முகானந்தம் சீட்பெல்ட் அணிந்திருந்தார். இதனால் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இதில் அ.தி.மு.க. பிரமுகரின் மனைவி புஷ்பவல்லி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இவரது மகன் மோகன் மற்றும் உறவினர் சரஸ்வதி ஆகியோரும் லேசான காயம் அடைந்தனர்.

டிரைவர் திருக்குமரன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

Tags:    

Similar News