உள்ளூர் செய்திகள்

கீழக்கரை அருகே கடலில் மூழ்கி சிறுவன் பலி

Published On 2022-08-23 06:38 GMT   |   Update On 2022-08-23 06:38 GMT
  • கடலில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் குறித்து கீழக்கரை கடலோர காவல் படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • தந்தையுடன் செல்லும் ஆசையில் சென்ற சிறுவன் கடலில் மூழ்கி பலியான சம்பவம் கீழக்கரை பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள சின்னமாயாக்குளம் பாரதி நகரை சேர்ந்த மீனவர் உமையராஜ். இவரது மகன் சுமித்திரன் (வயது8). மனநிலை பாதித்த அவனால் வாய் பேசவும் முடியாது.

இந்த நிலையில் இன்று காலை உமையராஜ் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். வீட்டில் இருந்து கடற்கரையை நோக்கி நடந்து சென்ற தனது தந்தையை பின் தொடர்ந்து சிறுவன் சுமித்திரன் சென்றிருக்கிறான்.

மகன் வருவதை கவனிக்காமல் உமையராஜ் கடற்கரையில் நின்ற நாட்டுப்படகில் ஏறினார். தந்தையுடன் செல்லும் ஆசையில் சிறுவன் சுமித்திரன் கடலுக்குள் நடந்து சென்றான். அப்போது அவன் கடல் அலையில் சிக்கி மூழ்கினான்.

இதனை அந்த பகுதியில் நின்றவர்கள் உமையராஜிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் கடலுக்குள் குதித்து தண்ணீரில் மூழ்கி கிடந்த தனது மகனை மீட்டு கீழக்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுவன் சுமித்திரனை பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கடலில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் குறித்து கீழக்கரை கடலோர காவல் படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையுடன் செல்லும் ஆசையில் சென்ற சிறுவன் கடலில் மூழ்கி பலியான சம்பவம் கீழக்கரை பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News