கடலூரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பியூஸ்கேரியர் திருட்டு: மின்சாரம் இன்றி தவித்த பொதுமக்கள்
- மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் பில்லர் பாக்சினை திறந்து பியூஸ் கேரியர்களை எடுத்து சென்றது தெரியவந்தது.
- பியூஸ் கேரியரை திருடிய 3 பேரையும் அடையாளம் காணும் பணியும், அவர்களை வலைவீசியும் போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தானே புயல் காரணமாக 30 நாட்கள் வரை பொதுமக்கள் மின்சாரம் இன்றி தவித்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு அப்போதைய அரசு அடிக்கடி இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் மாவட்டமான கடலூர் மாவட்டத்தின் தலைநகர் கடலூருக்கு புதை வழி மின்சாரம் கொண்டு வந்தது. இதன் அடிப்படையில் பல ஆண்டுகளாக நடைபெற்ற பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் நகரின் ஒரு பகுதியில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த புதைவட கேபிள் பணிகளுக்கான பியூஸ் கேரியர்கள் ஆங்காங்கே உள்ள பில்லர் பாக்ஸ்களில் அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த நிலையில் இன்று அதிகாலை கடலூர் மஞ்சக்குப்பம், கோண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை மின்சாரம் தடைபட்டது. மீண்டும் மின்சாரம் வந்து விடும் என்றிருந்த அப்பகுதியினர், விடிந்த பிறகும் மின்சாரம் வராததால் மின் துறையினரிடம் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் அவர்கள் வந்து பார்த்த போது பில்லர் பாக்ஸ்களிலிருந்து பியூஸ் கேரியர்களை காணவில்லை. இது தொடர்பாக அவர்கள் கடலூர் புதுநகர் போலீசாரிடம் புகாரளித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் பில்லர் பாக்சினை திறந்து பியூஸ் கேரியர்களை எடுத்து சென்றது தெரியவந்தது. திருடப்பட்ட பியூஸ் கேரியர் ஒன்று ரூ.900 என்பதால் இதனை அவர்கள் திருடியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பியூஸ் கேரியரை திருடிய 3 பேரையும் அடையாளம் காணும் பணியும், அவர்களை வலைவீசியும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை உருவாக்கியுள்ளது.