கூட்டுறவு சங்கம் நடத்தி ரூ.58 கோடி மோசடி- சேலத்தில் மேலும் ஒருவர் கைது
- தனியார் கூட்டுறவு சங்கத்திற்கு தமிழகத்தில் ஆயிரம் இடங்களில் கிளை தொடங்கி ரூ.58 கோடி வரை வசூலித்து திருப்பி தராமல் சங்கத்தை மூடி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
- மேச்சேரி எரப்பரெட்டியூர் பகுதியை சேர்ந்த சங்க கணக்காளர் கண்ணனை நேற்று போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
சேலம் அழகாபுரத்தில் அமுதசுரபி சிக்கன கூட்டுறவு கடன் சங்கம் பேரில் தனியார் கூட்டுறவு சங்கம் 2019-ல் தொடங்கப்பட்டது. அயோத்தியா பட்டினத்திலும் அதன் கிளை திறக்கப்பட்டு அதே ஊரைச் சேர்ந்த ஜெயவேல் தலைவராக செயல்பட்டார்.
சேலம் அம்மாபேட்டை தங்க செங்கோடன் தெருவை சேர்ந்த பாஸ்கரன்(52) என்பவர் அயோத்தியாபட்டணம் சங்கத்தில் பல்வேறு திட்டத்தில் 2.92 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். உரிய காலம் நிறைவடைந்த பின்னர் முதிர்வுத் தொகை கிடைக்காததால் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் புகார் அளித்தார்.
விசாரணையில் இந்த தனியார் கூட்டுறவு சங்கத்திற்கு தமிழகத்தில் ஆயிரம் இடங்களில் கிளை தொடங்கி ரூ.58 கோடி வரை வசூலித்து திருப்பி தராமல் சங்கத்தை மூடி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தை நடத்திய ஜெயவேல் என்பவரை கடந்த மாதம் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் மேச்சேரி எரப்பரெட்டியூர் பகுதியை சேர்ந்த சங்க கணக்காளர் கண்ணனை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.