உள்ளூர் செய்திகள்

ஆண்டிபட்டி அருகே பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-07-28 04:17 GMT   |   Update On 2022-07-28 04:17 GMT
  • ஆண்டிபட்டி அருகே பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வருசநாடு:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் மனைவி தமிழ்ச்செல்வி(42). இவர்களுக்கு கார்த்திகா என்ற மகளும், தீபக்(17) என்ற மகனும் உள்ளனர். சுரேஷ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன்பிறகு தமிழ்ச்செல்வி வேலை பார்த்து தனது 2 குழந்தைகளையும் படிக்க வைத்துள்ளார்.

கார்த்திகா என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். தீபக் வி.சி.புரம் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த சில நாட்களாகவே தனக்கு பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லை. பாடங்கள் கடினமாக உள்ளது என தனது தாயிடம் கூறி வந்தார். அதற்கு தந்தை இல்லாத இந்த வீட்டில் நீ படித்தால்தான் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என அறிவுரைகள் சொல்லி வந்துள்ளார்.

நேற்று காலை தமிழ்ச்செல்வி வேலைக்கு சென்றுவிட்டார். கார்த்திகா கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது தீபக் தூக்குப்போட்ட நிலையில் இறந்துகிடந்தார்.

இதுகுறித்து கண்டமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News