உள்ளூர் செய்திகள்

சென்னையில் விமான சேவை சீரானது

Published On 2022-12-11 09:40 GMT   |   Update On 2022-12-11 09:40 GMT
  • தற்போது பலத்த மழை, காற்று இல்லாததால் சென்னையில் விமான சேவை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளது.
  • அனைத்து விமானங்களின் புறப்பாடு, வருகை சரியான நேரத்திற்கு மாறி இருக்கிறது.

ஆலந்தூர்:

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது.

இதனால் கடந்த 2 நாட்களாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதே போல் நேற்று 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

மேலும் நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 3 மணி வரை 2 மணி நேரம் ஓடு பாதையும் மூடப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய மலேசியா, மும்பை, அபுதாபி, சிங்கப்பூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விமானங்களின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு தாமதமாக புறப்பட்டு சென்றன.

இந்த நிலையில் தற்போது பலத்த மழை, காற்று இல்லாததால் சென்னையில் விமான சேவை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளது. அனைத்து விமானங்களின் புறப்பாடு, வருகை சரியான நேரத்திற்கு மாறி இருக்கிறது.

இது தொடர்பாக சென்னை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "சென்னை விமான நிலையத்தில் விமான சேவை வழக்கம் போல் உள்ளது. கடினமான நேரத்தில் உறுதுணையாக இருந்த அரசு மற்றும் விமான நிலையங்கள், ஊழியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. நிலைமையை புரிந்து ஒத்துழைப்பு அளித்த அனைத்து பயணிகளுக்கும் நன்றி" என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News