உள்ளூர் செய்திகள்

கொளத்தூரில் 9-ம் வகுப்பு மாணவர் 'திடீர்' மரணம்

Published On 2022-10-19 08:48 GMT   |   Update On 2022-10-19 08:48 GMT
  • தீபக்கிற்கு பெற்றோர் வீட்டில் இருந்த காய்ச்சல் மாத்திரையை கொடுத்ததாக கூறப்படுகிறது.
  • பின்னர் இரவு அனைவரும் வழக்கம் போல் தூங்க சென்று விட்டனர்.

கொளத்தூர்:

கொளத்தூர், பகவதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். கார் டிரைவர். இவரது மனைவி ஜெயப்பிரதா. இவர்களது மகன் தீபக் (வயது13).

இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை வழக்கம்போல் பள்ளியில் இருந்து திரும்பிய தீபக்கிற்கு காய்ச்சல் ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் தீபக்கிற்கு பெற்றோர் வீட்டில் இருந்த காய்ச்சல் மாத்திரையை கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் இரவு அனைவரும் வழக்கம் போல் தூங்க சென்று விட்டனர்.

இன்று அதிகாலை நீண்ட நேரம் ஆகியும் தீபக் எழும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக மகனை பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாணவன் தீபக் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு பெற்றோர் அலறி துடித்தனர்.

தகவல் அறிந்ததும் கொளத்தூர் போலீசார் விரைந்து வந்து தீபக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவனின் சாவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. அவரது பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னரே இதுகுறித்த விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News