மாநகர பஸ்சில் சிக்கி காயம் அடைந்த 9-ம் வகுப்பு மாணவன் மரணம்
- கடந்த மாதம் 8-ந்தேதி மாலை மேடவாக்கம் பகுதியில் மாநகர பஸ்சில் ஆர்யா தொங்கியபடி பயணம் செய்தான்.
- மேடவாக்கம் ஜங்ஷன் அருகே வந்த போது திடீரென ஆர்யா தவறி கீழே விழுந்தான்.
வேளச்சேரி:
பெரும்பாக்கம், கலைஞர் நகர், முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தாஸ். இவரது மகன் ஆர்யா(வயது14). மேடவாக்கம் அருகே உள்ள வெள்ளக்கல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம்வகுப்பு படித்து வந்தான்.
இவன் கடந்த மாதம் 8-ந்தேதி மாலை மேடவாக்கம் பகுதியில் மாநகர பஸ்சில் (எண்99) தொங்கியபடி பயணம் செய்தான். மேடவாக்கம் ஜங்ஷன் அருகே வந்த போது திடீரென அவன் தவறி கீழே விழுந்தான். இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய மாணவன் ஆர்யா பலத்த காயம் அடைந்தான். அவனை மீட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவன் ஆர்யா பரிதாபமாக இறந்தான்.
இதுகுறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.