உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்கள் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவன் தற்கொலை: 3 ஆசிரியர்களிடம் விசாரணை

Published On 2023-12-02 03:48 GMT   |   Update On 2023-12-02 03:48 GMT
  • பிரம்மதேசம் போலீசார் பவித்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • தற்கொலை செய்து கொண்ட மாணவன் பவித்திரன், பள்ளியில் பயிலும் மாணவியை கேலி செய்துள்ளார்.

மரக்காணம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நகர் என்கிற ஊரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இருபாலரும் பயிலும் இப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த 800-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.

அதன்படி நகர் கிராமத்தை சேர்ந்த பவித்திரன் (வயது 13), அப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொணடான். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பிரம்மதேசம் போலீசார் பவித்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தற்கொலை செய்து கொண்ட மாணவன் பவித்திரன், பள்ளியில் பயிலும் மாணவியை கேலி செய்துள்ளார். இதனை ஆசிரியர்கள் கண்டித்ததுடன், பவித்திரனை முட்டி போட வைத்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவன் வீட்டிற்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News